புத்தாண்டின் பின் ரணில் எடுக்கவுள்ள  அதிரடியான தீர்மானங்கள்: பரந்தப்பட்ட கூட்டணியை உருவாக்க வியூகம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை பிரதானக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.தேர்தலை எதிர்கொள்ளும் வலுவான கூட்டணிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானக் கட்சிகள் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிலேயே உள்ளன. மறுபுறம் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பரந்தப்பட்ட கூட்டணியொன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் சிவில் அமைப்புகளும்,  தொழிற்சங்கங்களும் அதிகளவாக இணைந்து வருகின்றன. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்சியை தயார்ப்படுத்தும் பணிகளில் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் செயல்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே ஆளுங்கட்சிக்குள் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  இதனால் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் பிரதான கட்சியாக பொதுஜன பெரமுன இடம்பெறும் என்பதுடன், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவையே மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்வார் எனவும் அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒருதரப்பினரை இணைத்து பரந்தப்பட்ட கூட்டணியை உருவாக்கும் வியூகத்தை ரணில் வகுத்துள்ளார்.

அதற்கான பேச்சுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. புத்தாண்டின் பின் ரணில் பல அதிரடியான தீர்மானங்களை எடுக்க உள்ளதுடன், மக்களை கவரும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இந்த பின்புலத்தில் புத்தாண்டின் பின்னர் ரணில் – மஹிந்த சந்தித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வியூகங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரியவருகிறது.இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளை ரணிலிடம் மஹிந்த எடுத்துக்கூற உள்ளதாகவும் அறிய முடிகிறது.