வவுனியாவில் கூடுகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு

ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு புதிய பொது செயலாளரை தெரிவு செய்வதற்காக அந்தக் கட்சியினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடுகின்றனர்.

இந்தத் தகவலை கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.கூட்டணியின் பொதுச் செயலாளராக இருந்த ஆர்.ராகவன் இயற்கை எய்தியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த கூட்டத்தின் போது, ஜனநாயக கூட்டணியை மாவட்டந்தோறும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. விசேடமாக கூட்டணியின் கிளைகள் மறுசீரமைப்பு, புதிய அங்கத்துவம் சம்பந்தமான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. இதேநேரம், ஏலவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.