வெடுக்குநாறி கைது விவகாரம்: கைதுசெய்யப்பட்டவர்கள் உணவுதவிர்ப்பு போராட்டம்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டபோதே குறித்த எட்டு பேரும் நேற்றுமுதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. திலகநாதன் கிந்துஜன்,  சுப்பிரமணியம் தவபாலசிங்கம், மதிமுகராசா, துரைராசா தமிழச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகியோரே நேற்று முதல் உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் 5 பேர் நேற்று காலை முதல் உணவை எடுக்க மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். இதன்காரணமாக, அவர்களது குடும்பங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என கூறியுள்ளார்.