நுவரெலியாவில் சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.

செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இன்னும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது வைத்தியசாலையின் நுழை வாயிலின் முன்பாக நண்பகல் முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் பல்வேறு வசனங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணமும் குறிப்பாக தற்போது காணப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய கோரியும் , நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதால் வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் அல்லது வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.