நாளை முல்லைதீவில் பாரிய போராட்டம்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் முல்லைத்தீவில் கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் நாளையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகளை வெளிப்படுத்தவும்,விடுவிக்கவும் வலியுறுத்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

“நாளை(08) சர்வதேச மகளிர் தினம் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை  தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் பெண்களாகிய நாம் இன்னமும் எமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடாத்தப்படவுள்ளது என்பதுடன் கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாகவும் விரைவான தீர்வு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.