வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி : யாழ் ஊடகங்களை புறணிப்புச் செய்ய வைத்த தென்னிலங்கை வலையமைப்பு.

வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி நாளை  ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் ஒன்றின் சதி நடவடிக்கையால் ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிகபட்டுள்ளது.

யாழ்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117வருட பாரம்பரியத்தைக்கொண்ட வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு கல்லூரி வீரர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டிகளில் பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பில் இரு கல்லூரி
அதிபர்களால் அறிவிக்கபடுவது வழமையானது.

எனினும் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கின் பெரும்போர் குறித்து ஊடகங்களுக்கு எதுவித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை. அத்தோடு இரு கல்லூரி அணித் தலைவர்களும் இணைந்து வெற்றிக் கிண்ணத்தினை ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஊடகங்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை யாழ்.மத்திய கல்லூரி பொறுப்பெடுத்தபோதும் ஊடகங்களுக்கு எதுவிதமான அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட நபர்களை ஊடகங்கள் தொடர்புகொண்டபோதும் அவர்கள் பொறுப்பற்ற பதில்களை வழங்கியுள்ளனர். குறித்த போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் தனது விளையாட்டு செய்திகள் அடங்கிய இணையத்தளத்தை பிரபல்யமாக்கும் முனைப்போடு பிரதான ஊடங்களை புறக்கணித்துள்ளது.

குறித்த தென்னிலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டிகளின் போதும் ஊடகங்களை திட்டமிட்டு புறக்கணித்தது.போட்டிகளுக்கு அனுசரணை வழங்குபவர்கள் தங்கள் நலன்களுக்காக 117வருடபாரம்பரியத்தை மாற்றுவதற்கு இரு கல்லூரி நிர்வாகங்களும் துணைபோகக் கூடாது என மூத்த ஊடகவியலாளர்கள் பலரும்   கோரிக்கை விடுத்துள்ளனர்.