இரு மணிநேர முடக்கத்துக்குப் பின் பேஸ்புக், இன்ஸ்ரா வழமைக்கு திரும்பின

மேற்றா நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்புக் கோரல்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

மேற்றா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்ரகிராம், மற்றும் மெசஞ்சர் ஆகிய பிரபல சமூகவலைத் தளங்கள் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு முடங்கின.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பயனாளர்களைப் பாதித்த இந்த முடக்கத்துக்குத் தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று மேற்றா நிறுவனம் இன்று பின்னராக அறிவித்தது. தடங்கலுக்காக அது தனது பயனாளர்களிடம் மன்னிப்புக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
பாரிஸ் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 16.30 மணிக்குப்பின்னர் பேஸ்புக், இன்ஸ்ரகிராம் போன்ற தளங்களைப் பயனாளர்கள் அணுக முடியாதிருந்தது.
தளங்களை அணுக முடியாத பயனாளர்களிடம் அவர்களது அடையாள அங்கீகாரத்தைக் கோருகின்ற வழக்கமான அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. உள் நுழைவதற்கான கடவுச்செற்கள் கோரபெபட்டன. இரட்டை அங்கீகாரத்தைக் (double authentication) கோரியவர்களுக்கு அதற்கான ரகசிய இலக்கங்கள் (code) அனுப்பப்படவில்லை. இது குறித்துப் பேஸ்புக் பயனாளர்களுக்கான முறைப்பாட்டுத் தளமாகிய Downdetector  தளத்துக்கு பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் வந்து குவிந்தன.
பாரிஸ் நேரப்படி மாலை 18.00 மணியளவிலேயே பேஸ்புக் வழமைக்குத் திரும்பியது.
மேற்றா நிறுவனத்தின் வட்ஸ்அப் செயலி இந்தக் குழப்பத்துக்குள் சிக்கவில்லை.