பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவியை இராஜிநாமா செய்யமாட்டேன்:சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அந்தப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது அது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சரியாக அமுல்படுத்தாமை, அரசமைப்பு, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறியமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் உத்தர லங்கா சபை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவியை இராஜிநாமா செய்யமாட்டேன். எவருக்கும் பயந்து ஓடவும் மாட்டேன்.’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.