ஆவணக்காட்சிப் பெட்டகம்:  பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேற்று அவர்  வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப் பேணல் மற்றும் காட்சிப்படுத்தல் செயற்பாட்டை திறம்பட மேற்கொள்ள இதுவரை தங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியம் மிக்க பாவனைப்பொருட்கள், அணிகலன்கள், ஏட்டுச்சுவடிகள், புராதன நூல்கள் என்பவற்றை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கு இலவசமாக வழங்கி உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், பாரம்பரியப்பொருட்களை வழங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் ஆவணப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது