ரஷ்ய-உக்ரைன் போருக்கு இராஜதந்திர தீர்வை காணுங்கள்: பரிசுத்த பாப்பரசர் வலியுறுத்தல்.

ரஷ்ய-உக்ரையன் போருக்கு இராஜதந்திர ரீதியான தீர்வை எட்டவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பாப்பரசரின் வாராந்த செய்தியில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை பாப்பரசர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை மக்களை பார்வையிடுவதை ரத்து செய்துள்ளதாக வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதினால் எச்சரிக்கை காரணமாக மக்கள் பார்வையினை பாப்பரசர் தவிர்த்துள்ளதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை இடம்பெறவிருந்த முக்கிய சந்திப்புக்களை ரத்து செய்திருந்தார்.இதேவேளை பாப்பரசரின் உடல்நலன் காரணமாக டுபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.