தமிழரசுக் கட்சியின் தலைவர்  சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்த  இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் அழைத்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது என்று சிறீதரனின் எம்.பியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காகச் சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்தியத் தூதுவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் சத்யஞ்சல் பாண்டேவும் இணைந்திருந்த இந்தச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.