யாழ். இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு  மீனவர்கள் போராட்டம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன்,  தூதுவராலயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராலயத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றபோது,  தூதுவராலயத்திற்கு அருகாமையில், பொலிஸாரால் போராட்டக்காரர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் ஏழு பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் போது போராட்டக்காரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது ‘இந்திய இழுவை படகு உரிமையாளர்களே! எங்களையும் வாழ விடுங்கள்’, ‘கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே!’, ‘தொப்புள்கொடி உறவுகளை பிரிக்காதே!’, ‘இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார்!’, ‘அத்துமீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும்!’, ‘சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து!’ மற்றும் ‘வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே!’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஸ்ரீபோது போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த கடற்றொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன் பெருமளவிலான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.