யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தெல்லிப்பழை – கொல்லங்கலட்டியில் தனது நண்பருடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை இளைஞர் ஒருவர் உட்கொண்டுள்ளார். பின்னர், நண்பருக்கு தெரியாமல் ஐஸ் போதைப் பொருளையும் உட்கொண்டுள்ளார். அதீத போதைப்பொருள் பாவனையால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த இளைஞர் கைபேசியில் தாயாரை தொடர்பு கொண்டு தான் ஆபத்தில் இருப்பதை தெரிவித்துள்ளார். வீட்டுக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், தாயார் உடனடியாக அங்கு சென்றுள்ளார். அதற்குள் இளைஞர் உயிரிழந்துவிட்டார்.இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

இதனிடையே போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் 30 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையான அவர் போதைப் பொருள் குற்றத்துக்காக சிறையிலும் இருந்தவர் என்றும் அறிய வருகின்றது.