எந்தவித பயனுமற்ற தற்போதைய அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தையும் பறிக்க முயல்கிறது

கிராமத்திற்கும் நகரத்திற்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் எந்தவித பயனுமற்ற தற்போதைய அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தையும் பறிக்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

வங்குரோத்தான நமது நாட்டில் மக்களையும், கிராமத்தையும் நகரத்தையும்,மக்களையும் பொருட்படுத்தாத தோல்வியடைந்த அரசாங்கமே ஆட்சியில் இருந்து வருகிறது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களைக் கொல்லாமல் கொன்று வருகிறது. இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பக்கம் இருந்து சர்வதேச நாணய நிதிய உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

220 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை பொருட்படுத்தாது பெரும் செல்வந்தர்களை மேலும் பெரும் செல்வந்தவர்களாக பாதுகாத்துக் கொண்டு மக்களின் பேச்சு சுதந்திரத்தையும் ஜனநாயக சுதந்திரத்தையும் பறித்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நிகழ்நிலைக் காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உண்மையை அறியும் உரிமையைப் பறிக்க முயற்சித்து வருகின்றனர். இவ்வாறான அரசாங்கமொன்றில், நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சாதாரண மக்கள் 3 வேளை உணவு உண்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

மக்களுக்கு சாபக்கேடான, மக்கள் படும் துன்பத்தை கண்டுகொள்ளாத தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பி மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் 2024 ஆகும். இந்த மாற்றத்தின் மூலம் இந்நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தி, வேறுபட்ட பரிமாணத்திற்கு கொண்டு சென்று, அறிவும் திறனும் நிரப்பமாகக் கொண்ட மாணவச் செல்வங்களாக வலுப்படுத்தி வெற்றிகரமான தேசத்தை உருவாக்குவோம். இப்பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

தகவல் தொழில்நுட்பக் கல்விக்கு இந்தியா வழங்கிய முன்னுரிமையின் விளைவாக, வீட்டுப் பணியாட்களை விட தகவல் தொழிநுட்ப அறிவும் திறனும் கொண்ட திறமையான பணியாளர்களை வெளிநாடுகளின் தொழிலாளர் சந்தைக்கு இந்தியா அனுப்பி வருகிறது.

இந்தியாவுக்கு அத்தகைய திறன் இருந்தால், நமது நாட்டிலும் அத்தகைய திறன்  உண்டு. ‘நம்மால் முடியும்’ என்ற கொள்கையுடன் நாமும் ஒன்றாய் முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இன்று, தாய்-சேய் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வரும் நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில்,பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு வழங்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஸ்மார்ட் உபகரணம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.