முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகளான எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதாரர் கூறுகிறார்.அதன் பின்னரே அந்த பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் பிரதமருக்கு இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை அந்த பதவிக்கு நியமித்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் எனவும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.