விசா விவகாரத்தில் கட்டுப்பாடு விதித்த கனடா.

கனடாவுக்கு செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கனடாவில் தங்கி கல்வி கற்க அந்த நாட்டு அரசு விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த சூழலில் சமீப ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலைமையை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் 35 சதவீதம் குறைக்கப்பட்டு 3, 60, 000 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்இ கனடா அரசின் இந்த கட்டுப்பாட்டால் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் கனடாவின் கல்வி விசாக்களை அதிகம் பெறும் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.