அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற கர்தினால் ரஞ்சித் ஆண்டகை.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மனுதாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றில் இது தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் உள்ள விதிகள், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து தடுத்து வைக்க இராணுவம், பொலிஸார் மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளித்துள்ளதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தியுள்ள தனிமனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.