நேதாஜி சுபாஷ் சத்திர போஸ் இல்லையென்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் இலலை: ஆளுனர் ரவியின் கருத்தால் சர்ச்சை.

இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  ஆங்கிலேயர் நமது நாட்டை விட்டு சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தை பண்பாட்டையும்,  ஆன்மீக சிறப்பையும் மறந்தோம். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். நேதாஜி கட்டமைத்த இந்திய ராணுவத்தில் ஏராளமான தமிழர்கள் இணைந்து கொண்டு பணியாற்றி  உள்ளனர். தமிழகத்தில் இருந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை நாம் பெறவில்லை.

நேதாஜி ஆரம்பித்த ராணுவத்தில் பெண்கள் படையை கட்டமைத்தார். ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 7 தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வந்தனர். நேதாஜி சுபாஷ் சத்திர போஸ் இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலனளிக்கவில்லை. இந்தியாவிற்குள்ளே மக்கள் தங்களுக்குள் மோதிகொண்டிருந்த நிலைதான் இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டங்கள் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமில்லை. இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே காரணம் என்று முந்தைய இங்கிலாந்து பிரதமர் அட்லீ சுட்டிகாட்டியுள்ளார் என்றும்இ நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவம் குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவின் தேச தந்தை நேதாஜி தான் என்றும் ஆளுநர் ரவி இன்றைய நிகழ்ச்சியில் பேசினார்.இன்றைய நிகழ்ச்சியில் இந்திய தேசிய ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தார் என பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.