ஜனாதிபதித் தேர்தல்: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரம் 19ம் திகதி முதல் ஆரம்பம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களை நாளை மறுதினம் 19ஆம் திகதிமுதல் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்க உள்ளது. அதன்பிரகாரம் ஐ.தே.கவின் முதல் பொதுக் கூட்டம் கொழும்பில் நடைபெற உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு ஒக்டோபர் இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்தால் கடந்தகாலத்தில் ஏனைய தேர்தல்களை பிற்போட முடிந்தாலும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பொன்றை கட்டாயம் நடத்தியே ஆக வேண்டும்.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள பின்புலத்தில், அனைத்துக் கட்சிகளும் தமது பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளன.

நாளை மறுதினம் 19ஆம் ஐ.தே.க தமது பிரசாரக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐ.தே.க பொது வேட்பாளராக அறிவிக்க உள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திலும் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. என்றாலும், ஜனாதிபதி நீண்ட உத்தியோகப்பூர்வ பயணமொன்றை சுவிட்சர்லாந்து மற்றும் உகண்டாவுக்கு மேற்கொண்டுள்ளார். இதனால், இந்தக் கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டது போல் பிரமாண்டமாக நடைபெறுமா அல்லது இடைநிறுத்தப்படுமா என்பது தொடர்பிலான அறிவிப்புகள் எதனையும் ஐ.தே.க இதுவரை வெளியிடவில்லை.

கட்சியின் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் நாளை மறுதினம் முதல் நாடு முழுவதும் தொடர்க் கூட்டங்களை ஐ.தே.க நடத்த உள்ளது.