மக்களின் வரிப் பணத்தில் உல்லாசகப்பல் பயணம்: மஹிந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான சர்ச்சை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் இன்பச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த காணொளி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அதனை மறுத்துள்ளார்.

கொழும்பில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர்இ இந்த பயணம் ஆய்வு நடவடிக்கை ஒன்றுக்கானது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அழைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இது குறித்த காணொளியை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப முற்படுவதாகவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் எம்.பி.க்களின் வீடுகளை எரித்தவர்களே இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அனுமதியின்றி காணொளியாக பதிவுசெய்துள்ளதாகவும், அதனை செய்தவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கான மொத்த செலவு சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தான் இந்த கண்காணிப்பு பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

நாங்கள் இன்பச் சுற்றுலா செல்லவில்லை. ஆய்வு ஒன்றுக்காகவே சென்றிருந்தோம். வரவு- செலவுத்திட்ட விவாதத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகத்தை பார்வையிட வேண்டும் என கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்கள்.இதனால்தான் நான் இந்த ஏற்பாடை செய்திருந்தேன். துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடமும் இதற்காக நாம் அனுமதியை பெற்றிருந்தோம்’ என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்