மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் கடும் வெள்ளப் பெருக்கு.

பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின் கல்லல்ல-மானம்பிட்டிய பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பராக்கிரம ஏரியின் வான்கதவுகள் பிற்பகல் இரண்டு மணியளவில் திறக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

அதன் மூலம் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் வாகன போக்குவரத்தை முற்றாக நிறுத்துமாறு பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளருக்கு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து சிரமங்களுக்கு உள்ளாகும் அனைத்து பயணிகளுக்காக கதுர்வெல மற்றும் மன்னம்பிட்டிய இடையே விசேட புகையிரத சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனங்களுக்கு மாற்றுப் பாதையாக பக்கமூன, எலஹெர வீதியைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பாதையில் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.