சமாதானத்தை ஏற்படுத்த 3 நிபந்தனைகளை விதித்துள்ள இஸ்ரேல்.

காஸாவில் ஹமாஸூடனான போரில் சமாதானத்தை ஏற்படுத்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு அழியவேண்டும் எனவும் காஸா ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத பகுதியாக மாற வேண்டும் எனவும் பாலஸ்தீன சமூகம் போராட்ட போக்கைக் கைவிடவேண்டும் எனவும் பெஞ்சமின் நெதன்யாஹூ நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

காஸா மீதான தாக்குதல்களை குறைக்க வேண்டும் என இஸ்‌ரேலுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் காஸா மீதான இராணுவ தாக்குதல்களை ஆரம்பித்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹமாஸை அழிக்கும் விவகாரத்தில், இஸ்‌ரேல் தொடர்ந்து சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் என நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை காஸாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு கூறியுள்ளது.