திருகோணமலை மாவட்ட நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் – யான் ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .

இதன் அடிப்படையில் இன்று காலை 6 மணி அளவில் பதவியா நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யான்ஓயா நீர் தேக்கத்தின் ஐந்து கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கதவுகள் 450 மில்லி மீட்டரிலும், இரண்டு கதவுகள் 200 மில்லி மீட்டரிலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் தாழ்நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

திருகோணமலை, கிண்ணியா மூதூர், தோப்பூர், கந்தளாய், தம்பலகாமம், புல்மோட்டை,குச்சவெளி, கோமரங்கடவல,முள்ளிப் பொத்தானை முதலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

சில வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதோடு சில இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகளும் இடம் பெற்று வருகின்றன.

இதேவேளை கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக (16) திகதி ஆறு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கந்தளாய் குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் வான் கதவு திறந்து இருப்பதன் காரணத்தினால் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை முதலான பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரைப் பிரதேசங்களில் வாழும் கடற்றொழிலாளர்கள் சிலர் கடலுக்குச் செல்ல வில்லை எனவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.