ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவோம்-ஜீ.எல்.பீரிஸ்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக மக்களை பாதுகாப்பதே தமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”இல்லாதவர்களிடம் இருந்து முடியுமானவரை வரியை அறவிடுகின்றனர். தனவந்தர்கள் மீது கைவைப்பதில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது. அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர். அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.