நாங்கள் சிங்கத்தை போன்றவர்கள் எங்கள் மீது கல்லெறிய வேண்டாம்-பசில் ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகாததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்குகொண்டு வர அனைவரும் தயாராகுவோம். அதனை சிறப்பான அரசாங்கமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.நாட்டு மக்களை மரண அச்சத்தில் காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே.

அதேபோல் ஊருக்கு செல்லும் போது கூட மஞ்சள் கடவையை தவிர வேறு இடத்தில் பாதையை கடந்து செல்ல வேண்டாம் என நான் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.

எந்த இடத்திலாவது எமது தவறுகளை கண்டுபிடிக்க சமூக ஊடகங்கள் காத்து கிடக்கின்றன.இதனால், நாம் மிகவும்ஒழுக்கமான, மகிந்த ராஜபக்ச எமக்கு கற்றுக்கொடுத்த உன்னத பாடங்களை படிப்பினையாக கொண்டு எமது கட்சியை முன்மாதிரியான கட்சியாக மாற்றி எதிர்வரும் காலங்களில் செயற்படுவோம்.

இதன் காரணமாக நாம் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது.

நாங்கள் அதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதை கூற வேண்டும். வீதியில் செல்லும் நாய் மீது கல்லெறிந்தால், நாய் குரைத்து விட்டு, மேலும் வேகமாக ஓடும்.

ஆனால், சிங்கத்தின் மீது கல்லெறிந்தால்,கல்லெறிந்தது யார் என்று திரும்பி பார்க்கும். நாங்களும் சிங்கத்தை போன்றவர்கள்.

எங்கள் மீது கல்லெறிய வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.