கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 394 குடும்பங்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 11.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில்இ 54 குடும்பங்களை சேர்ந்த 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 340 குடும்பங்களை சேர்ந்த 1048 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்து வரும் நிலையில் தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.