சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் ஆதரவு.

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். இனப்படுகொலை தொடர்பில் உரையாற்றியுள்ள அவர் அமெரிக்க காங்கிரசில் உள்ள தனது சகாக்கள் தமிழ் மக்களிற்கு எதிராக் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு தீர்வை காணமுயல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிராந்தியத்தில் சுய நிர்ணயஉரிமையை அடிப்படையாக கொண்ட தீர்விற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நான் தமிழ் மக்களிற்கு ஆதரவாகயிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார். 1948 இல் பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் கீழ் இந்த சாம்ராஜ்ஜியங்கள் ஒன்றிணைக்கப்பட்டமை தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.  இந்த செயற்பாடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அலட்சியம் செய்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களிற்கு எதிரான அரசாங்கத்தின் அனுசரனையுடனான பாரபட்சமும் வன்முறையும் 30 வருட மோதல்களிற்கு வித்திட்டது 2009 தமிழ் இனப்படுகொலைக்கு காரணமாக அமைந்ததுஎனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமீபத்தில் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்துள்ள அவர் இது ஆழ்ந்த கவலையளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தோ பசுபிக்கின் இந்த முக்கியமான பகுதியில் ஸ்திரதன்மை மற்றும் அமைதியை உறுதி செய்யும் நிரந்தரமான தீர்வொன்றிற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.