இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய போராட்டம் வெடிக்கலாம் – IMF

இலங்கையில் பாரியளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரி அறவீடு சக்தி வளத்துறையில் விலை அதிகரிப்பு, ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக போதிய அளவு நடவடிக்கை எடுக்கப்படாமை, உள்ளூர் தேர்தல் நடத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு சமூக முரண்பாடுகள் அல்லது போராட்டங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படும் நிலையானது நிதி துறையில் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.