கனடாவுக்கு செல்ல முயன்ற  பருத்தித்துறை இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கத்தார்  செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். விமான அனுமதிக்கான சோதனையின் போது இவரது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.விசாரணையில் குறித்த கடவுச்சீட்டு போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி கடவுச்சீட்டு தனது தாயின் சகோதரனான தனது மாமாவின் உதவியுடன் தரகர் ஒருவரிடத்தில் 40 இலட்சம்  ரூபாய் வழங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இவர் இலங்கையில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.