அபுதாபி சென்ற ரஷ்ய அதிபர் புதின்: உற்று பார்க்கும் சர்வதேச நாடுகள்.

ரஷ்ய அதிபர் புதின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை புதின் சந்தித்து பேச உள்ளார். புதினின் இந்த பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது.

இதனால், ரஷ்யா மீது கோபம் கொண்ட அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி மற்றும் நிதி உதவியை அளித்துள்ளதோடு ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இப்படி தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுத்தாலும் பின்வாங்க மறுக்கும் புதின், உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறார்.உக்ரைன் மீதான ரஷ்யா போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கிவிட்டது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் அந்நாடு மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கும் இது ஏமாற்றமும் அளித்தது.

இன்னொரு பக்கம் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.  இதனால், பெரும்பாலும் புதின் வெளிநாடு பயணங்களை தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவுக்கு மட்டும் கடந்த அக்டோபர் மாதம் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில், புதின் அபுதாபி பயணம் மேற்கொண்டுள்ளார். புதின் மேற்கொண்டுள்ள அரிதான வெளிநாட்டு பயணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ளும் புதின், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணய் விவகாரம் ஒபெக் நாடுகள் விவகாரம் மற்றும் காசா மற்றும் உக்ரைன் பிரச்சினை ஆகியவை குறித்தும் பேசப்படலாம் என்று தெரிகிறது.