காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சுரங்கங்களை நீரால் நிரப்ப இஸ்ரேல் முயற்சி.

இஸ்ரேல்- ஹமாஸ் போரையடுத்து காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சுரங்கங்களை நீரால் நிரப்ப இஸ்ரேல் பெரிய குழாய்களைத் தயார்ப்படுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக நேற்று முன்தினம் வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் தெரிவித்தது.

நவம்பர் மாத நடுப்பகுதியில் குறைந்தது ஐந்து குழாய்களை இஸ்ரேலிய இராணுவம் அமைத்துள்ளது. அல்-‌ஷாட்டி அகதிகள் முகாமுக்கு சுமார் 1.6 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களின்வழி மணிக்கு ஆயிரக்கணக்கான கன மீட்டர் கடல்நீரை அனுப்ப முடியும். அதன் மூலம் சில வாரங்களில் ஹமாஸ் பயன்படுத்தும் சுரங்கங்களை நீரால் நிரப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.