பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்.

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்வைக் குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி 2022 இல் இங்கிலாந்திற்கு நிகர இடம்பெயர்வு 7 லட்சத்து 45ஆயிரம் ஆக உயர்ந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  தெரிவிக்கையில், குடியேற்றம் மிக அதிகமாக உள்ளது. இன்று நாம் அதைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் இங்கிலாந்துக்கு நன்மையளிப்பதோடு பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புலம்பெயர்தலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.

ஒரு தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கான வரம்பு £26, 200 இலிருந்து £38, 700 ஆக உயர்வடைந்துள்ளது. குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கான வரம்பு £18, 600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் ‘மக்கள் நிதி ரீதியாக ஆதரவளிக்கக்கூடியவர்களை மட்டுமே பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியும். இதேவேளை மாணவர் விசாக்களிலும் சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளை தவிர்த்து படகுகளில் பிரித்தானியாவுக்கு நுழைபவர்களின் வருகையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.