வடக்கு, கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்று வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

இது நாளை (05) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என ளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புக்களில் பயணிக்க வேண்டாம் என மீனவ சமூகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.