தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் களமிறங்கியுள்ள இருவர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டிக்களத்தில் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப்பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர்.

சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம், சொலமன் சிறில், குலநாயகம், குமரகுருசாமி, பரஞ்சோதி, ஜேம்ஸ், இரத்தனவடிவேல், உள்ளிட்ட 12பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேநேரம், சிறிதரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து குருகுலராஜா, வேழமாலிகிதன், விஜகுமார், உள்ளிட்ட அறுவர் கையொப்பமிட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எதிவரும் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி பொதுச்சபை கூட்டப்பட்டு தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.

அதற்கு முன்னதாக, 20ஆம் திகதி ஒன்று கூடும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு புதிய தலைமையை ஏகமனதாக தெரிவு செய்யும். ஓன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றபோது அல்லது ஏகமனதாக தெரிவுகள் இடம்பெற முடியாதிருக்கின்ற நிலையில். 21ஆம் திகதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு செய்யப்பட்டு மாநாட்டில் உரையாற்றுவார்.இம்முறை தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு திருகோணமலையில நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.