வடக்கு,  கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை.


யுத்தம் காரணமாக வடக்கு,  கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ‘2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்ய பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்பகுதி மக்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் இந்த செயற்பாடுகளை நாம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தோம். தற்போதும், யுத்தம் காரணமாக அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களை சொந்த பகுதிகளில் குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1 இலட்சத்து 47 ஆயிரத்து 848 வீடுகளை, அரசாங்கம் பல்வேறு தரப்பினரின் உதவியுடனும் நிர்மானிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் 1700 வீட்டுத் தொகுதிகளில் நிர்மானப் பணிகள் பூரணமாகியிருக்கவில்லை.

இவ்வருட ஆரம்பத்தில் நாம் மேலும் 1665 வீடுகளை நிர்மாணிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். 150 மில்லியன் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 500 மில்லியன் ரூபாயும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 3 வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் குடியமர்த்த முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். 2024ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்குள், கண்ணிவெடிகள் அற்ற நாடாக இதனை மாற்ற நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கில் 204 சதுர கிலோமீற்றர் அளவில் கண்ணி வெடிகளை அகற்றி, அந்தக் காணிகளை மக்களிடத்தில் ஒப்படைத்துள்ளோம்.

இன்னும் 15 சதுர கிலோமீற்றர் காணிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேசத்தின் நிதியுதவிகள் எமக்கு கிடைத்துள்ளன’ என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.