சவூதி-இரும்பை உண்ணச்சொல்லி இலங்கை பெண்ணுக்கு கொடுமை

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாகச் சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி, இன்று (22) நாட்டை வந்தடைந்தார்.

மத்துகம – நேபட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இராமசந்திரன் தர்ஷனி, சவூதி அரேபியாவில் பணியாற்றிய வீட்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சவூதி அரேபியாவிலிருந்து குவைட் வழியாக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த அவர், அங்கு தான் அனுபவித்த கொடுமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“என்னை சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினார்கள். கீழே தள்ளி என்னை தாக்கினார்கள். இரண்டு ஆணிகள் மற்றும் இரும்புத் துண்டொன்றை கையில் கொடுத்து உட்கொள்ளுமாறு கூறினார்கள்.

“இல்லையென்றால், தங்க நகைகளை திருடியதாக தெரிவித்து, பொலிஸாரிடம் பிடித்து கொடுப்பதாக கூறினார்கள். நான் ஆணிகளை உட்கொண்டேன். ஒரு அணி தொண்டையில் சிக்கியது. எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” என, அப்பெண் தெரிவித்துள்ளார்.