மாவீரர்நாள் நினைவேந்தலை தடைசெய்ய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

எதிர்மனுதாரர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதத்தை தொடர்ந்து, வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது.

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என தெரிவித்த நீதிமன்றம் பொலிஸாரின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

எதிர்மனுதாரர்களின் சார்பில் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இதேவேளை, மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கட்டளை இன்று (21) வழங்கப்படவுள்ளது