எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் : மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் தேவைப்படும் நேரத்தில் முன்நிறுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவும்,  தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பார்சல்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இதில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.அந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரப் பொருட்கள், 5000 ரூபாய் நிதியுதவி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.