உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டுமெனும் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான அண்மையில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் எனவும்,  வாய்ப்பு கிடைக்கும்போது அதற்கான காரணங்களை விளக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் எனவும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.