22 மில்லியன் மக்களுக்கும் வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்ச சகோதரர்களிடம் உள்ளது: எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள நஷ்டஈடு வழங்கப்படுமாயின் இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்ச சகோதரர்களிடம் நாட்டிற்கு வெளியில் இருப்பதாக கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்களிடமிருந்து அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியில் வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அனைத்து பணத்தையும் கொண்டு வந்து அந்த பணத்தில் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுமக்களின் பணம் திருடப்பட்டதால் தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரியில் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். திருடிய பணத்தை திரும்பக் கொண்டு வர உத்தரவிடவும், அதனால் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறச் செய்யவும், இழப்பீடு கோருவதற்கும்  இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.