மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கணிய மணல் அகழ்வு.


மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வு குறித்தும் கணிய மண் அகழ்வை நிறுத்த அரசு மற்றும் உரிய அமைப்புக்களும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் மன்னார் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்த மாவட்டம் முகம் கொடுக்கின்ற பிரச்சனையாக கனிய மணல் அகழ்வு காணப்படுகின்றது.

காற்றாலை மின்சாரம் அதற்கு அப்பால் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் சடுதியாக கணிய மணல் அகழ்வு அல்லது கணிய மணல் கொள்ளை விடையத்தில் அரசு முனைப்பு காட்டுகிறது. மன்னாரில் அண்மையில் சுமார் 13 க்கும் மேற்பட்ட அரச திணைக்களங்கள் வருகை தந்து கனிய மணல் அகழ்வுக்கான செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த திட்டம் எவ்வளவு வலுவானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அத்திட்டத்தை ஆராய்கின்ற போது மணல் மாத்திரமா ? அல்லது வேறு ஏதும் கொள்ளைகள் இருக்கிறதா? என்பதை சிந்திக்க தோன்றுகிறது.இங்கிருக்கின்ற சாதாரண அதிகாரிகளுக்கும் தெரியாமல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

குறிப்பாக மேல் மட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் ஊடாக அது திணிக்கப்பட்டு இன்று மக்களின் வாழ்விடத்துக்குள் அது ஊடுருவி அந்த மண்ணை அகழ்வதற்காக வருகை தந்தனர்.குறித்த விடயம் குறித்து கடந்த வாரம் மன்னார் மாவட்டமே கிளர்ந்து எழுக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஒரு பெரிய பிரச்சினையாக இந்த மன்னார் மக்கள் எதிர் கொள்கின்றார்கள்.இந்த மணல் அகழ்வினால் குறிப்பிட்ட கிராமமும் குறிப்பிட்ட பகுதி அல்ல இந்த மன்னார் தீவே பாதிக்கக்கூடிய ஒரு நிலையை கொண்டு வரும் என்று அச்சப்படுகின்றனர். எனவே அரசு அல்லது இது சார்ந்து செயல்படுகின்ற அமைப்புகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.