யாழ்ப்பாணம்- புனித யாகப்பர் ஆலய 30ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆலய பங்குத்தந்தை யாவிஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதைத்தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் , 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

பழமை வாய்ந்த தேவாலயமும் பகுதிகளவில் கடும் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது. குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.