யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் மற்றும் யுவதி இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் மற்றும் யுவதி இருவரும் கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரும் 19 வயது யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் துபாய் செல்வதற்காக இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்,  பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாம் தரகர் ஒருவரால் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், செல்லும் இடம் குறித்து தெரியாது என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.