நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம்: யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் மீளப்பெற்றுக் கொண்ட சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பான அறிக்கை.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை அடுத்து யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் ‘நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்’ என்ற தலையங்கத்தில் உரையாற்ற இருந்தார்.

இந்நிலையில், இறுதி நேரத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒருசிலரின் தீர்மானத்தால் அவரது உரை இரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகா மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையில் தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கு பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.இதனையடுத்தே சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெற்றதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.