மக்கள் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றம் முழுமைப்பெறவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

மக்களாணை இல்லாத இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் மக்களுக்கு எதிராக சட்டங்களை உருவாக்க முயற்சிக்கும். சட்டமூலங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் அந்த சட்டங்களை மீறி மக்கள் செயற்படுவதற்கு துணிய வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

இதனை பகிரங்கமாக குறிப்பிடுகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சட்டத்தரணிகள் கூட்டிணைவின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் ‘வாயை மூடும் சட்டங்கள் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் இதனைத் குறிப்பிட்டார்.மேலும் மக்களின் ஜனநாயக அம்சங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியனவற்றை முடக்கும் வகையில் சட்டமூலங்கள் உருவாக்கப்படுவது தற்போது ஒரு கலாசாரமாக மாறிவிட்டது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மக்களின் கோஷங்கள் மற்றும் எதிர்ப்புகள் மேலோங்கின.மக்களின் அழுத்தமான கோஷங்களினால் பாரிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மக்களின் கடுமையாக கருத்து வெளிப்பாட்டினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். பிரதமர் உட்பட அமைச்சரவை கூட்டாக பதவி விலகியது. ஆனால் மக்கள் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றம் முழுமைப்பெறவில்லை.முழுமைப்பெறாத மாற்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றி தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளார். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து மக்களாணை இல்லாமல் போய்விட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆட்சியாளர்களும் அறிவார்கள். மக்களாணை இல்லாத ஆட்சியாளர்கள் தான் தற்போதும் ஆட்சி செய்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை போலியான ஆணையை கொண்டு ஆட்சி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது.போலி பெரும்பான்மையை கொண்டு நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான சட்டமூலங்கள் கொண்டு வரப்படுகின்றன இயற்றப்படுகின்றன.நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனால் இந்த முயற்சிகளை இனங்காண வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் ஊடாக செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்களை சட்டமூலத்தை இயற்றாமலே செய்ய கூடிய சாத்தியம் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.