போதைக்கு அடிமையான மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு .

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரப்பகுதியில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 வயதுடைய மாணவன் இன்று தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்டுள்ளார்

10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 வயதுடைய குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள். எனினும் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லாத மாணவன்…

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பாடசாலை நிர்வாகங்கள் சரியான முறையில் அக்கறை காட்ட தவறியுள்ளமையும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையுடன் தொடர்புடைய மாணவர்கள் குறிப்பிட்ட காலம் பாடசாலை செல்லவில்லை என்றால் அவர்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களின்  கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

இவ்வாறு பல சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன இவற்றை பாடசாலை நிர்வாகங்கள் சரியான முறையில் கவனிக்கவேண்டும்.