இந்திய அமைச்சரின் விஜயத்தையடுத்து  சீனத் தூதுவர் குழு யாழ்ப்பாணத்துக்கு  விஜயம்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோருடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளவிருப்பதுடன், சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோன்புத் திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகச் சீனத் தூதரக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 ரூபா வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.