திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை

கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷனில் அனுமதியின்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்க முயன்றதை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல், பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில்லை எனக்கூறி போலீசார் அனுமதி  மறுத்துள்ளனர். 

தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற பாஜக  தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் பாஜக  பின்வாங்கப் போவதில்லை.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்.