மனைவி போல பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவன் கைது.

தனது மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணுடன் இத்தாலிக்கு செல்வதற்கான விமானத்தில் ஏற முற்பட்டவேளை குடிவரவு அதிகாரிகளால் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது ஐந்து வயது மகன் மற்றும் காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணுடன் தனது மனைவி என தெரிவித்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 1:45 மணியளவில் எயார் அரேபியா விமானமான G9509 இல் ஏறுவதற்காக வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் தமது ஆவணங்களை ஒப்படைத்தவேளை, அவர்களின் ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழத் தொடங்கின.

இதனையடுத்து, மூவரும் மேலதிக விசாரணைக்காக எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம், குழந்தை ஆணுக்கு சொந்தமானது என்றாலும், பெண் அவரது மனைவி அல்லது குடும்ப உறுப்பினர் அல்ல, தொடர்பில்லாத தனிநபர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை வரவழைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து தனது பாவனைக்காக வைத்திருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், இதே கடவுச்சீட்டை பயன்படுத்தி இதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், ஆண், பெண் மற்றும் குழந்தையை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.