நுவரெலியாவில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக மின்விளக்குகளை அணைத்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

செ.திவாகரன்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் நுவரெலியா பிரதான நகரில் அப் பகுதி பொது மக்கள் மற்றும் பிரதான நகர வியாபாரிகள் இணைந்து தீ பந்தம் ஏந்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் புதன்கிழமை (01) இரவு 7 மணிக்கு தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் ஆரம்பித்த நேரம் நுவரெலியா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ள மின் விளக்குகளை அணைத்தும் , மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியும் அடையாளப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .

குறித்த ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி “மின் கட்டணத்தை உயர்த்தாதே” மின் கட்டணத்தை குறைக்க முடியாவிட்டால் துறைசார்ந்த அமைச்சர் பதவி விலக வேண்டும் , நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மக்கள் மீது வரிச் சுமையை திணிக்க வேண்டாம் , நாளாந்தம் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றமும் சாதாரண பொது மக்கள் உட்பட அனைவரையும் பாதிக்க வைத்துள்ளது என தெரிவித்தும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இப்போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.